மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளம் பாதிப்பு குறித்து சென்னையில் இன்று (டிசம்பர் 7) செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, “கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 95 சதவிகித பகுதிகள் சரி செய்யப்பட்டுவிட்டது.
நிவாரண முகாம்களில் நேற்று 41,406 பேர் தங்கியிருந்தனர். இன்று 18,750 பேர் தங்கியுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் பிரிவைச் சேர்ந்த 34 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று கூட ஹெலிகாப்டர் மூலம் 3000 பாக்கெட் உணவுகள் தெற்கு சென்னையில் விநியோகிக்கப்பட்டன.
மொத்தம் 9000 பேர் மின்சாரம், சுகாதாரம் என பல்வேறு பிரிவுகளில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மொத்தமாக சென்னையில் 0.43 சதவிகிதம் மட்டுமே மின்வெட்டு உள்ளது.
பால் விநியோகத்தை பொறுத்தவரை இன்று ஆவின் மூலமாக 14.5 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பால் விநியோகத்தில் பிரச்சினை இருக்காது.
நாளை முதல் நடமாடும் வாகனங்களில் காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். ரூ.5060 கோடி நிவாரண நிதி வேண்டும் என்று கேட்டிருந்தார்.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசு ஏற்கனவே ஜூலையில் முதல் தவணையை விடுவித்தது. இன்று ரூ. 450 கோடி அறிவித்திருக்கிறது. அதுவும் விரைவில் வந்துவிடும்.
இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆய்வு செய்து சென்றிருக்கிறார். மத்திய குழு விரைவில் இங்கு வந்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். விரைவில் மத்திய குழு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவர்கள் அறிக்கை கொடுத்த பிறகுதான் ஒன்றிய அரசு எவ்வளவு கொடுக்கிறது என தெரியும்” என்றார்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி ஏதேனும் வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, “அதுபற்றி ஆலோசனை நடந்து வருகிறது. பிறகு இதுகுறித்து சொல்லப்படும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா