கோவை – சிங்கப்பூர் இடையே இண்டிகோ நிறுவனம் சார்பில் வழங்கப்படும் சேவை வரும் டிசம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்பட உள்ளது.
தொழில் நகரமான கோவை விமான நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் கோவை விமான நிலையத்தை ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது.
கோவை விமான நிலையத்தில் இருந்து “கோவை – சிங்கப்பூர் இடையே இண்டிகோ நிறுவனம் சார்பில் 2024 அக்டோபர் மாதம் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு கோவையில் புறப்படும் ‘ஏர்பஸ்’ ரக விமானத்தில் 186 பேர் பயணிக்க முடியும். ஆனால் இந்த விமான சேவைக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. இதன் காரணமாக இந்த விமான சேவை வரும் டிசம்பர் முதல் ரத்து செய்யப்பட உள்ளது.
இதனால் விமான நிறுவனங்கள் இயக்கம் தொடர்பாக வெளியிடப்படும் குளிர்கால அட்ட வணையில் இந்த சேவை இடம்பெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் கோவையில் இயக்கப்பட்டு வந்த விமானம் விஜயவாடா – சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் என்றனர்.
கோவை- சிங்கப்பூர் இடையே இண்டிகோ நிறுவனத்தின் ஒரு சேவை ரத்து செய்யப்படும் நிலையில், மற்றொரு நிறுவனம் ‘ஸ்கூட் ஏர்லைன்ஸ்’ சேவை வழக்கம் போல் தொடரும். வாரத்தின் அனைத்து நாட்களும் கோவையில் இருந்து இரவு 11 மணி அளவில் சிங்கப்பூருக்கு விமான சேவை வழக்கம் போல் தொடரும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
