சிஎஸ்கே அணி 7வது தோல்வியை அடுத்து, ஐபிஎல் ஏல முறையை மனம் திறந்து விமர்சித்துள்ளார் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங். Fleming slams IPL auction after CSK’s 7th defeat
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 25) இரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
நடப்புத் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய சென்னை அணிக்கு இது 7வது தோல்வியாகும். மேலும் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சென்னை அணி எதிர்கொண்ட 4வது தொடர் தோல்வியாகும்.

இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு என்பது முற்றிலும் மங்கிவிட்டது.
இந்த நிலையில் போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், ஐபிஎல் ஏல முறை, அணியின் எதிர்காலம் உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசினார்.
அவர், “போட்டியின் முடிவை பார்க்கும்போது, நாங்கள் சரியாக விளையாடினோம் என சொல்ல முடியாது. தற்போது எங்கள் விளையாட்டு பாணி குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறோம். தொடரின் போக்கை கவனித்து வருகிறோம்.
இன்றும் எங்கள் சாதனையை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஐபிஎல் தொடரில் பல முறை நிலையான வெற்றியை பெற்றிருக்கிறோம்.

தொடருக்கு முன்னதாக நடந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே ஒரு சூப்பர் பேட்டரைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டது. மேலும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஏற்பட்ட காயமும் அணியை மோசமாக்கியுள்ளது.
ஐபிஎல் ஏலம் நாங்கள் விரும்பியபடி செல்லவில்லை. 24 மணி நேரத்திற்குள் அணியை உருவாக்குவது என்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைய செய்கிறது.
எனினும் எங்களிடம் இன்னும் ஒரு நல்ல அணி இருப்பதாக இப்போதும் நான் நினைக்கிறேன். விரைவில் மீண்டு வருவோம்” என ஃபிளெமிங் தெரிவித்தார்.
சேப்பாக்கம் மைதானத்தில் 4வது தொடர் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி, வரும் 30ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
