ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 48 பேர் பலியாகி உள்ளனர்; மேலும் காணாமல் போன 200 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் சிஷோதி பகுதியில் நேற்று ஆகஸ்ட் 14-ந் தேதி திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கனமழை கொட்டி பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மனசல் பாத யாத்திரை தொடங்கும் பகுதியில் இந்த வெள்ளம் சூழ்ந்தது.
இந்த வெள்ளத்தில் சிக்கி 48 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 200 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பெருவெள்ளம் தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ஜம்மு – காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நிலை குறித்த சிந்தனையுடன், அந்த மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
