பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனைய கட்டிடம், சென்னை – கோவை வந்தே பாரத் ரயில், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தின் 125-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 8) சென்னை வருகிறார்.

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று கமிஷனர் அலுவலகத்தில் சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின்படி கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் சென்னையில் 22 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பிரதமர் மோடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ராமகிருஷ்ணா மடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை காவல்துறையினர் தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரயில் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
சென்னையில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் நேற்று முதல் சோதனை செய்து வருகின்றனர். நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
செல்வம்
