மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்புகள் இன்று (அக்டோபர் 9) வெளியாகிறது.
அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் என்டிஏ, இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தலுக்கு தயாராவதற்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஐந்து மாநில தேர்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடுகிறது.
இந்த அறிவிப்பில் தேர்தல் நாள், வேட்புமனு தாக்கல், வேட்புமனு தாக்கல் கடைசி நாள், தேர்தல் முடிவுகள் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சப்ஜி