தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருந்த ‘ருத்ரன்’ திரைப்படத்திற்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவசர வழக்காக நாளை (ஏப்ரல் 13) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக இருந்தது.
ப்ரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா, நாசர், காளி வெங்கட் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் படத்திற்கு எதிராக கடைசி நேரத்தில் தீர்ப்பளித்து அதிர்ச்சி கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

படத்திற்கு தடை
இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வழங்குவதற்காக ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனத்துடன், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ரூ.12.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.
அதன்படி முதல் கட்டமாக ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் ரூ.10 கோடி செலுத்தியிருந்தது. இந்நிலையில், கூடுதலாக ரூ.4.50 கோடி கேட்ட தயாரிப்பு நிறுவனம், எதுவும் சொல்லாமல் திடீரென தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே சமரச முயற்சிகள் நடந்து வந்தது.
இதற்கிடையே ‘ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட்டால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்தும், மனுவுக்கு பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டும் விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதனால் நாளை மறுதினம் வெளியாக இருந்த ருத்ரன் படத்திற்கு கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கலால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

நாளை அவசர வழக்கு
இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் முறையீடு செய்தது.
இத்திரைப்படம் சுமார் சுமார் 700 மேற்பட்ட திரையரங்குகளில் 14ம் தேதி படம் வெளியாக உள்ளது. பல திரையரங்குகளில் முன்பதிவும் வேகமாக நடந்து வருகிறது. படம் குறிப்பட்டபடி வெளிவரவில்லை என்றால் பெரும் நஷ்டம் எற்படும். எனவே இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தடைக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அம்பேத்கர் பிறந்தநாள்: அர்ஜூன் சம்பத்துக்கு அடுக்கடுக்கான நிபந்தனைகள்!