மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500ஆக உயர்த்திய புதுச்சேரி

Published On:

| By Selvam

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்புக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் ஏற்கெனவே மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500 ஆக இருந்த நிலையில் ரூ.1,000 உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்று அந்தக் கோப்பு கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான விடுமுறை கால நிதி உதவி மற்றும் இயற்கை பேரிடர் கால நிவாரண உதவித் திட்டத்தின்கீழ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதிஉதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்புக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, மீன்பிடித் தடைக்கால நிவாரணம்  ரூ.5,500இல் இருந்து ரூ.6,500 ஆகவும், விடுமுறைக்கால நிதியுதவி ரூ.2,500இல் இருந்து ரூ3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 5,000 ரூபாயாக இருந்த மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை கடந்த (2022) ஆண்டு 6,000 ரூபாயாக உயர்த்தியது.

இந்த நிவாரண தொகையைக் கூடுதலாக உயர்த்தியும் அதைத் தடை காலத்துக்குள்ளேயே வழங்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நான் உங்களுடன் நிற்கிறேன்: ராகுலுக்கு கமல் ஆதரவு!

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் பாலிடிரிக்ஸ்… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க அபாயம்?  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share