ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆர்.பி.எஃப் வீரர்: 4 பேர் பலி!

Published On:

| By Monisha

Firing incident in jaipur mumbai express

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் இன்று (ஜூலை 29) ரயில்வே பாதுகாப்பு படை வீரர் (ஆர்.பி.எஃப்) துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி “12956” என்ற எண் கொண்ட ஜெய்ப்பூர் – மும்பை விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் இன்று காலை பால்கர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் ரயிலில் இருந்த பயணிகள் அச்சத்தால் கூச்சலிட்டனர்.

தொடர்ந்து தப்பிக்க முயன்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேற்கு ரயில்வே கூறுகையில், “ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்ததும் ஆர்.பி.எஃப். காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் ஆர்.பி.எஃப் துணை காவல் ஆய்வாளர் (ஆர்.பி.எஃப் ஏ.எஸ்.ஐ). மற்றும் மூன்று பயணிகளை சுட்டுவிட்டு தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை போலீஸ் அதிகாரிகள் ஆயுதத்துடன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று விளக்கம் அளித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில், “துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

மீண்டும் இரட்டை சதமடித்த தக்காளி விலை!

கடைசி நாளான இன்று ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share