பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 22) அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த கேசவன்(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மார்க்நாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 90 அறைகளில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இச்சூழலில், பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் வழக்கம் போல் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில்,ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் மூலப்பொருட்களில் தடாலென உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

இந்த வெடி விபத்தில் அலுவலக அறையில் இருந்த மார்க்நாதபுரத்தை சேர்ந்த கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா(24) என்ற பெண் வெடி விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜெயசித்ராவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
