எப்.ஐ.ஆர் லீக்… மத்திய அரசு விளக்கம் அளித்தால் நம்பனுமா? : சீமான் கேள்வி!

Published On:

| By christopher

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்த எங்களின் போராட்டம் நாடகம் என்றால், எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக நடத்திய போராட்டமும் நாடகம் தானா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (டிசம்பர் 31) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் பங்கேற்க மாலையில் வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்து, சென்னை பெரிய மேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

சில மணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

அப்போது அவர், “தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தரே இல்லாமல் நடைபெற்று வருகிறது. மாநில உரிமைக்கோரும் திமுக அரசு இதில் என்ன செய்தது?

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை எஃப்.ஐ.ஆர் மட்டும் எப்படி கசிந்தது? அதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவித்தால் அதை நாங்கள் நம்ப வேண்டுமா? மணிப்பூர் கலவரம், பில்கிஸ் பானு வழக்கு என இதுபோன்று எத்தனை விஷயத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது? குற்றங்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் சிசிடிவி கேமிராக்கள் செயல்படாமல் போனது ஏன்? பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் இன்னும் ஏன் வாக்குமூலம் பெறவில்லை?

என்ன ஆட்சி இது?

எங்களின் போராட்டம் நாடகம் என்றால், எதிர்க்கட்சியாக நீங்கள்(திமுக) இருக்கும்போது எத்தனை போராட்டம் நடத்தினீர்கள் அதெல்லாம் நாடகம் தானா?

நீங்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போட்ட தீர்மானங்களை மத்திய அரசு தூக்கி எறிந்துவிட்டதே? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கொடநாடு கொலை வழக்குகளில் நீதி பெற்றுக்கொடுப்போம் என்று சொன்னீர்களே.. இதுவரை அவற்றில் செய்தது என்ன? இந்த வழக்குகள் குறித்து நீங்கள் பேசியது நாடகம் தானா?

இதுவரைக்கும் நடந்த வழக்குகளில் நீங்கள் ஏதாவது செய்திருந்தால் உங்கள் மீது நம்பிக்கை வந்திருக்கும். ஆனால் இதுவரை நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லையே? நீங்களும் சரி செய்ய மாட்டீர்கள், எங்களையும் போராட அனுமதிக்க மாட்டீர்கள் என்றால் என்ன ஆட்சி இது?

அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

நான் மன்னிப்பு கேட்க வருண்குமார் ஐபிஎஸ் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலேயே கிடையாது. தவறு செய்தது நீங்கள். நான் மன்னிப்பு கேட்க நீ யார்? பொதுவெளியில் பேசியாச்சி… அவரிடம் நான் மன்னிப்பு கேட்க சொன்ன தொழிலதிபரை கூப்பிட்டு வர சொல்லுங்க. நான் தூது அனுப்புல, அவர் தான் பத்திரிகையாளர்கள், போலீஸ் உயரதிகாரிகள், தொழிலபதிரைவிட்டு என்னிடம் கெஞ்சினார்” என்று சீமான் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கிறிஸ்டோபர் ஜெமா

புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு படையெடுக்கும் கூட்டம் : களமிறங்கிய 2000 போலீசார்!

’35 சதவீத தொழில்வரி உயர்வு தான் புத்தாண்டு பரிசா?’ – எடப்பாடி கண்டனம்!

புத்தாண்டுக்கு நன்றி மட்டும் தான் ப்ரோ – அப்டேட் குமாரு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share