[ஸ்டாலின் உள்பட 1600 பேர் மீது வழக்கு!

Published On:

| By Balaji

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியும், அதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திமுக கூட்டணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கே.வி.தங்கபாலு, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, பாரிவேந்தர், ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், யாரைப் பாதுகாக்க இந்த வேளாண் சட்டங்கள் என கேள்வி எழுப்பினார். சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தார். அதன்பின்னர் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிந்த நிலையில் அப்போது நிறைவுரையாற்றிய ஸ்டாலின், “விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த போராட்டம் தடையை மீறி நடந்து முடிந்துள்ளது. தமிழக அரசு என்ன வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். விவசாயிகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று உரையாற்றினார்.

இந்நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share