ரூ.525 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு ஆகஸ்ட் 28 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதன் யாதவ், சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் பழமை வாய்ந்த ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர் அதிக வட்டி தருவாக கூறி முதலீடு பெற்ற நிலையில், சுமார் ரூ. 525 கோடி வரை நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில் திருச்சியில் பதுங்கியிருந்த தேவநாதன் யாதவை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வேலன்டினா முன்பு இன்று ஆஜர்படுத்தினர்.
அவருடன் கைது செய்யப்பட்ட குணசீலன், மகிமை நாதன் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது தேவநாதன் தரப்பில், தான் யாரையும் மோசடி செய்யவில்லை என்றும், தற்போது அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் வகையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது.
மேலும், தற்போது முதலீட்டுக்கான வட்டி தரப்படவில்லை என்று தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை 100 கோடி ரூபாய் வரை முதலீட்டாளார்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது என்றும், நான் தலைமறைவாக மாட்டேன், எனவே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி மலர், தேவநாதன் உள்ளிட்ட 3 பேருக்கும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நாட்டை உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: களமிறங்கிய சிபிஐ!
மேற்கு மாவட்டங்களில் இன்று கனமழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!