புதுச்சேரியில் இன்று (பிப்ரவரி 14) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 7,88,696 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. முன்னதாக டிசம்பர் 16, 2025 அன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 1,03,000 பேர் நீக்கப்பட்டிருந்தனர். பின்னர் திருத்தங்கள், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், SIR பணிகள் நிறைவடைந்து மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 7,88,696 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,70,955 பேரும், பெண்கள் 4,17,620 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேரும் உள்ளனர்.
மேலும், வில்லியனூர் தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். அதே சமயம், ராஜ்பவன் தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர்.
காரைக்கால் (மற்றும் மாஹே, யானம் உள்ளிட்டவை) சேர்த்து மொத்த வாக்காளர்கள் சுமார் 9,44,211 வரை உள்ளனர்.
இது குறித்து விவரங்களை https://ceopuducherry.py.gov.in/ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
