40 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

Published On:

| By christopher

Filing of nominations begins today

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20) தொடங்குகிறது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான வாக்குப்பதிவு முதல்கட்ட தேர்தல் நாளான வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று முதல் மார்ச் 27-ம் தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பாளர்களிடம் இருந்து காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை வேட்புமனு பெறப்படும்.

வரும் 28-ம் தேதி தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள், மனுக்களை வாபஸ் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, போட்டியிடும் வேட்பாளருக்கான சின்னமும் அறிவிக்கப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

இதற்கிடையே முழுமையான வேட்புமனு தாக்கல் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ளார்.

அதில், வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

3 மணி வரை காத்திருப்பவர்கள் அலுவலகத்துக்குள் வரவழைக்கப்பட்டு அனைவரும் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3.00 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை.

மனுதாக்கல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். மனுதாக்கலின் கடைசி நாளன்று பிற்பகல் 2 மணி முதல் இறுதி வரை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.

பொது வேட்பாளராக இருந்தால் ரூ.25,000, ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால் ரூ.12,500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

வேட்புமனுவை வேட்பாளர் அல்லது அவரை முன்மொழிபவர்கள் தாக்கல் செய்யலாம்.

அரசியல் கட்சிகளின் வேட்பாளராக இருந்தால் கட்சி அளிக்கும் சின்னத்துக்கான படிவம் இடம்பெற வேண்டும். ஒருவர் முன்மொழிய வேண்டும்.

சுயேச்சையாக இருந்தால் அந்ததொகுதியில் வசிக்கும் 10 பேர் முன்மொழிந்திருக்க வேண்டும். அதில் ஒருவர் மனுதாக்கலின்போது உடன் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் வேட்புமனுவை பூர்த்தி செய்ய மட்டுமே முடியும். பூர்த்தி செய்த மனுவை தேர்தல்நடத்தும் அலுவலரிடம் நேரில்தான் வழங்க வேண்டும். வேட்புமனுவுடன் பிரமாண பத்திரத்தையும் வழங்க வேண்டும்.

மனுவில் தவறு இருந்தால், தேர்தல் நடத்தும் அலுவலர் அதுதொடர்பாக வேட்பாளரிடம் தெரிவிப்பார். வேட்பாளர், அதை திருத்தி, மனுதாக்கலின் கடைசி நாளுக்குள் மீண்டும் வழங்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மாசுபட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு : மிக மோசமான நிலையில் இந்தியா!

பதஞ்சலி வழக்கு: பாபா ராம்தேவ்வை நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பியூட்டி டிப்ஸ்:  கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவுமா சாதம் வடித்த கஞ்சி?

ஹெல்த் டிப்ஸ்: ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share