உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை (நவம்பர் 20) தொடங்கி டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதன் முதல் போட்டியில் கத்தார் – ஈக்குவடார் நாடுகள் மோதவுள்ளன.
4 வருடங்களுக்கு ஒரு முறை கோலாகலமாக நடைபெறும் கால்பந்து விளையாட்டுத் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், தீவிர கால்பந்து ரசிகர்கள் போட்டியைக் காண்பதற்காக, போட்டி நடைபெறும் நாட்டிற்கு செல்வதும் நேரில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் தொலைக்காட்சி, இணையதளம் வாயிலாக நேரலையில் போட்டிகளைக் கண்டு ரசிப்பதும் உண்டு.
இந்த நிலையில் சட்ட விரோதமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்ப 12,000 இணையதளங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற வயாகாம் 18 மீடியா (VIACOM 18 MEDIA) நிறுவனம் பெருந்தொகையை முதலீடு செய்து உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்றுள்ளது.

ஆனால் உரிமம் பெறாத இணையதளங்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைச் சட்டவிரோதமாக ஒளிபரப்பும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வயாகாம் 18 மீடியா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த மனுவை இன்று (நவம்பர் 19) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சட்டவிரோதமாகப் பதிவு செய்யவும், ஒளிபரப்பு செய்யவும் 12,000 இணைய தளங்களுக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மோனிஷா