சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யு ட்யூப் சேனலின் உரிமையாளரும் ஆசிரியருமான பெலிக்ஸ் வரும் மே 27 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று (மே 14) அவரது சென்னை வீட்டில் திருச்சி போலீசார் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
பெண் காவலர்கள் பற்றி இழிவாகவும் கொச்சையாகவும் சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் யு ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். இது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையே சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்ததோடு அதை ஒளிபரப்பிய பெலிக்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி எஸ்பியிடம் முறிசி டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரோடு பெலிக்ஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தனக்கு முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பெலிக்ஸ். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, “சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸைதான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். யு ட்யூபர்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது” என்று கருத்து தெரிவித்து முன் ஜாமீன் விசாரணையை ஒத்தி வைத்தார்.
முன் ஜாமீன் கேட்டுப் போனால், ஏ2 வாக இருக்கும் தன்னை ஏ 1 ஆக்கச் சொல்கிறாரே நீதிபதி என்ற அதிர்ச்சியோடு பெலிக்ஸ்… டெல்லியில் இருக்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடம் முறையிடச் சென்றார்.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட போலீசார், ஆய்வாளர் வீரமணி தலைமையில் டெல்லி சென்றனர். அங்கே இருந்த பெலிக்சை மே 11 ஆம் தேதி இரவு கைது செய்தனர். தான் கைது செய்யப்படும் போது தனது மனைவியிடம் செல்போனில் பேசி தகவல் கொடுத்திருக்கிறார் பெலிக்ஸ்.
ஆனால், அதன் பின் அவரது செல்போனையும், சம்பந்தப்பட்ட ஆய்வாளர் வீரமணி செல்போனையும் பல முறை தொடர்புகொண்டும் தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று திருச்சி எஸ்பி ஆபீசில் முறையிட்டார் பெலிக்ஸின் மனைவி.
இதற்கிடையில் கைது செய்த 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்ற நடைமுறைப்படி… டெல்லியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் தெரிவித்து அங்கே சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்ப்படுத்த திருச்சி போலீஸார் முயற்சித்துள்ளனர். அது முடியாமல் போனதால், மே 12 ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் பெலிக்ஸை கூட்டி வந்தனர்.
மே 13 ஆம் தேதி பெலிக்ஸுடன் சென்னை வந்த போலீசார், சென்னையில் இருந்து போலீஸ் வேனில் திருச்சி அழைத்துச் சென்றனர். அங்கே மதியம் சென்றடைந்ததும் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருக்கும் சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பெலிக்ஸை விசாரித்தனர். பின் அவரை அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று மருத்துவ பரிசோதனைநடத்தி, அதன் பிறகு மாலை 5 மணிக்கு திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியும் 3 ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதியுமான ஜெயப்பிரதா முன் ஆஜர்ப்படுத்தினர்.
பெண் போலீஸாரை இழிவுபடுத்தி பேசிய சவுக்கு சங்கரின் கருத்தை ஆமோதித்ததோடு, அதை ஒளிபரப்பு செய்திடவும் செய்த பெலிக்ஸை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்கு முழுக்க முழுக்க பெண் காவலர்களையே நியமித்திருந்தார் எஸ்.பி.அருண். அதற்கான காரணம் நீதிமன்றத்தில்தான் தெரிந்தது.
பெண் போலீசாரை இழிவுபடுத்திய புகாரில் பெண் போலீஸார் புடை சூழ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பெலிக்ஸ். அவருக்காக வழக்கறிஞர் விக்னேஸ்வரன் ஆஜரானார். தனது வழக்கறிஞருடன் தானும் தெளிவான ஆங்கிலத்தில் நீதிபதியிடம் முறையிட்டார் பெலிக்ஸ்.
“என்னை டெல்லியில் வைத்து எந்த சட்ட விதிமுறைகளையும் நிறைவேற்றாமல் கைது செய்திருக்கிறார்கள். என் அடிப்படை உரிமையான குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை. என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் ஏழு வருட தண்டனைக்கு உட்பட்ட நிலையில், இவ்வளவு தீவிரமாக கைது நடவடிக்கையை மேற்கொள்ள தேவையில்லை” என்று பெலிக்ஸ் தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை முன் வைத்தனர்.
போலீஸாரோ, “பெலிக்ஸ் முன் ஜாமீன் மனுவில் உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்தை சுட்டிக் காட்டி” பெலிக்ஸை நீதிமன்றக் காவலில் வைத்திட அனுமதி கேட்டனர்.
பெலிக்ஸை பார்த்து நீதிபதி, “உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது? போலீஸார் உங்களை எப்படி நடத்தினார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு பெலிக்ஸ், “போலீஸார் என்னை ஜெனியூனாக நடத்தினார்கள். முன்பதிவு செய்யப்படாத ரயிலிலும், பிறகு வேனிலும் உட்கார வைத்து அழைத்து வந்ததால் என் கால்கள் வீங்கியிருக்கிருக்கின்றன. மற்றபடி போலீசார் என்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ளவில்லை” என்று கூறினார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதியிடம் ஓப்பன் கோர்ட்டில் கூடியிருந்த பெண் போலீசாரும், சில பெண் வழக்கறிஞர்களும், ‘நீதிபதி மேடம், நாங்கள் சில கருத்துகளை கூற அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டனர்.
சொல்லுங்க என்று அனுமதி அளித்தார் நீதிபதி.
அப்போது பெண் போலீஸார், “சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் பெண் போலீசாரான எங்களது நடத்தை பற்றி மிக கேவலமாக பேசியிருக்கிறார். அதை இந்த பெலிக்ஸும் ஆமோதிக்கிறார். நாங்கள் முறையாக விண்ணப்பித்து தேர்வு எழுதி பல கட்ட சோதனைகளைத் தாண்டி போலீஸாராக வந்திருக்கிறோம்.
ஆனால், பல லட்சம் பேர் பார்த்திருக்கக் கூடிய அந்த பேட்டியில் சவுக்கு சங்கரும், பெலிக்ஸும் கூறியுள்ள கருத்துகளால் பெண் போலீஸ் இனத்துக்கே அவமானமாக உள்ளது. எங்கள் வீட்டிலேயே எங்களை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். இது கடுமையான மன உளைச்சலாக உள்ளது. நீங்கள்தான் இதற்கு நீதி வழங்க வேண்டும்”: என்று முறையிட்டனர்.
இதன் பிறகு, “நான் அந்த வீடியோவை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று கூறினார் நீதிபதி ஜெயப்பிரதா.
அவருக்கு சவுக்கு சங்கரை பெலிக்ஸ் நேர்காணல் செய்த வீடியோ காண்பிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு, “பெலிக்சை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கிறேன்” என்று உத்தரவிட்டார் நீதிபதி ஜெயப்பிரதா.
அதன் பின் அதே பெண் போலீஸார் புடை சூழ பெலிக்ஸ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இரவு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது பெலிக்ஸ், “நாளை எந்த பத்திரிகையாளருக்கும் இந்த நிலைமை வரலாம்” என்று குரல் எழுப்பினார்.
இந்த பின்னணியில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் வீட்டுக்கு இன்று (மே 14) திருச்சி போலீசார் சோதனை நடத்துவதற்காக சென்றனர்.
அந்த பேட்டி தொடர்பான ஆவணங்கள். மின்னணு சாதனங்கள் இருக்கிறதா என்று சோதனையிடச் சென்ற போலீசாருடன் பெலிக்சின் மனைவி வாக்கு வாதம் செய்தார். பின் ஆவணங்களை காட்டிய பிறகு சோதனையிட்டனர் போலீஸார். பின்னர் ரெட் பிக்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் போலீசார் என்ன கைப்பற்றினர் என்பது பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெச்.ராஜாவுக்கு வார்னிங்… மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
கொளுத்தும் வெயில்: சென்னை, மதுரையில் கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு!