ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான கால அவகாசம் உள்ள ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து அதற்கு மாறாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிடுவது என்பது இந்தியாவில் அரிதாக நடைபெறும் சம்பவம். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நடைபெற்றுள்ளது.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாக இருக்கும் எம்.வி.முரளிதரன், தன்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதியாக பணியமர்த்துமாறு கோரிக்கை விடுத்த நிலையில், அவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் அக்டோபர் 11 ஆம் தேதி பரிந்துரை செய்துள்ளது.
ஏன் முரளிதரனின் கோரிக்கையை உச்சநீதிமன்ற கொலீஜியம் ஏற்கவில்லை… அவருக்கு பணியிட மாற்றம் ஏன்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியான முரளிதரன் அப்படி என்ன தீர்ப்பு கொடுத்தார்? என்ற கேள்விகள் எல்லாம் உங்களுக்கு எழலாம்.
அதற்கு முன்னதாக நீதிபதி எம்.வி.முரளிதரனின் பூர்வீகத்தையும் அவரது நீதிபதி பயணம் குறித்தும் இங்கு காண்போம்…
யார் இந்த எம்.வி.முரளிதரன்?
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ள மணியம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் ஏப்ரல் 16,1962ஆம் ஆண்டு பிறந்தவர் மணியம்பட்டு வஜ்ஜிரவேலு முரளிதரன். 61 வயதான அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறையில் பணியாற்றி வருகிறார்.
முதுநிலை வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ள முரளிதரன் தன்னை வழக்கறிஞராக 1990ஆம் ஆண்டு பதிவு செய்தார்.
உயர்நிதிமன்ற மதுரைக்கிளை, சென்னை உயர்நீதிமன்றம், DRT மற்றும் DRAT, சிட்டி சிவில், செஷன்ஸ் மற்றும் மாஜிஸ்திரேட் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் அவர் வழக்காடியுள்ளார்.
அங்கு குற்றவியல், கிரிமினல், ரிட் மனுக்கள் சிவில் வழக்குகள் என பல்வேறு வகையான வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக எம்.வி. முரளிதரன் நியமிக்கப்பட்டார்.
அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றிய அவர் எந்திரன் திரைப்பட கதை உரிமை வழக்கு, நடிகர் வடிவேலு – சிங்கமுத்து மோசடி வழக்கு போன்ற பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.
அதன்பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் முரளிதரன் பொறுப்பேற்றார்.
இப்படி கடந்த 30 வருடத்தில் வழக்கறிஞராக நீதித்துறையில் நுழைந்த முரளிதன், அடுத்தடுத்து தனது திறமையால் நீதிபதியாக, தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.
மணிப்பூர் கலவரத்திற்கு தீப்பொறியான தீர்ப்பு!
இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரன் விசாரித்து தீர்ப்பளித்தார். அதில் மெய்தி சமுதாய மக்களுக்கு பழங்குடியின அஸ்தஸ்து வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார் நீதிபதி முரளிதரன். இந்த உத்தரவு மணிப்பூரில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பியது.
மணிப்பூரில் வாழும் குகி எனும் சிறுபான்மை பழங்குடியினரின் நிலங்களையும், உரிமைகளையும் பறித்து மெய்தி எனும் பெரும்பான்மை சமூகத்திற்கு வழங்குவதற்கு அடிகோலும் சர்ச்சைக்குரிய தீர்ப்பாக பார்க்கப்பட்டது.
இதனை எதிர்த்து தான் மணிப்பூரில் உள்ள அனைத்து பழங்குடிகளின் மாணவர் சங்கம் கடந்த மே 3ஆம் தேதி தலைநகர் இம்பாலில் இருந்து 60 கி.மீ தொலைவில் சுராக்சன்பூர் மாவட்டத்திலுள்ள டோர்பால் பகுதி உள்ளிட்ட அனைத்து 8 மலை மாவட்டங்களிலும் பேரணி நடத்தியது.
இப்பேரணியில் குகியின மக்களுக்கு எதிராக மெய்தி சமூத்தினர் மோதலில் ஈடுபட்டனர். அந்த மோதல் கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் அணையா தீயாக உருவெடுத்து 150க்கும் மேற்பட்ட மக்களை உயிர்பலி வாங்கிய பெரும் கலவரமாக இன்றுவரை நீடிக்கிறது.
உச்சநீதிமன்றம் கண்டனம்!
இதற்கிடையே மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ”மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று நீதிபதி எம்.வி.முரளிதரன் வழங்கிய தீர்ப்பு தவறானது” என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும் மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய 3 மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த ஜூலை மாதமே கொலீஜியம் பரிந்துரை செய்தது.
ஆனால், அதனை செயல்படுத்துவதில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. இந்த நிலையில் அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சித்தார்த் மிருதுல் நியமனத்தில் தாமதம் செய்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கட்ரமணி, கொலிஜியத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
பரிந்துரையா… தண்டனையா?
இதற்கிடையே கடந்த 9ம் தேதி வெளியான கொல்கத்தா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி முரளிதரன் கொலிஜியத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதன்படி தன்னை கொல்கத்தாவிற்கு மாற்றுவதற்கு பதிலாக, தன்னை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அவர் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள கொலீஜியம், நீதிபதி எம்.வி. முரளிதரனை கொல்கத்தாவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றுவதற்கான முந்தைய பரிந்துரையையே மீண்டும் வலியுறுத்தியுள்ளது. விரைவிலேயே மத்திய அரசு இதற்கான உத்தரவுகளை குடியரசுத் தலைவர் அலுவலகம் மூலமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் 1963 இன் 4வது பிரிவின்படி 15வது அரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பிறகு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது 61 வயதான நீதிபதி எம்.வி. முரளிதரன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தற்போது பணியிட மாற்றத்திற்கான கொலீஜியத்தின் பரிந்துரை அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை மாதிரியே நீதித்துறை வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சவுதி இளவரசர்- ஈரான் அதிபர் போன் உரையாடல்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் திருப்பம்!
ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய தூதர் தமன்னா
Comments are closed.