ஒவ்வொரு வார இறுதியிலும் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தே ஆக வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பவர்கள்கூட இப்போது வீட்டிலுள்ள டிவியிலும், ஸ்ட்ரீமிங் வெப்சைட்களிலும் படம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு சினிமா ரசிகர்களை பாதித்திருக்கிறது உலகளவில் ஏற்பட்ட பெருந்தொற்றின் அச்சம். ஆனால், திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கும் கலைஞர்களை இந்த கொரோனாவால் எவ்விதத்திலும் தடுக்க முடியவில்லை.
பயமறியா பிரமை திரைப்படத்தின் படக்குழுவினர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்குத் தயாராக இருந்த நேரத்தில்தான் இந்த கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. அதன்பிறகு அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக, பட வேலைகள் எல்லாம் அப்படியே நின்றாலும் இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு திரைப்படத்தையே எடுத்து முடித்துவிட்டது படக்குழு. இதற்குக் காரணமாக அமைந்த இயக்குநர் ராகுல் கபில் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். காரணம், இந்தப் படத்துக்காக எந்த நடிகரும் எந்த இடத்துக்கும் வரவில்லை.
இயக்குநர் ராகுல் வீட்டிலிருந்தபடியே, வாட்ஸ்அப் மற்றும் போன்கால்கள் மூலமாக ஒவ்வொரு காட்சியாகச் சொல்ல, நடிகர்கள் ஹரிஷ் உத்தமன் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட படக்குழுவினர் நடித்துக்கொடுத்திருக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் இருந்த ஐபோன்களை வைத்தே இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். விரைவில், ஹாட்ஃப்ளிக்ஸ், அமேசான் மாதிரியான தளங்களில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.
**-சிவா**,”
