தனது 4 மகன்களை கட்டிப்பிடித்துக்கொண்டு தண்டவாளத்தில் நின்ற தந்தை மீது ரயில் மோதியதில் 5 பேரும் உடல் சிதறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Father trapped his 4 sons on rail track and suicide
பீகார் மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த தம்பதியர் மனோஜ் மஹதோ(45) – பிரியா. இவர்களுக்கு பவன் (10), கரு (9), முரளி (5) மற்றும் சோட்டு (3) ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தனது மனைவி மீது சந்தேகப்பட்ட மனோஜ், அடிக்கடி அவருடன் சண்டையிட்டு வந்தார். நேற்றும் வழக்கம்போல, தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி பிரியாவுடன் மனோஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் வீட்டைவிட்டு வெளியேறிய அவர், தனது நான்கு மகன்களிடமும் ஒரு பூங்காவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அவர்களையும் தன்னுடன் கூட்டிச் சென்றார்.
எதுவும் அறியாத குழந்தைகளும் தந்தையுடன் சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியில் சிப்ஸ், குளிர்பானங்களை கொடுத்து, பூங்காவிற்குச் செல்வதற்குப் பதிலாக, ரயில் தண்டவாளம் நோக்கி அழைத்துச் சென்றார்.
தண்டவாளத்திற்கு அருகிலுள்ள ஒரு மேம்பாலத்தின் கீழ் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த அவர், ரயில் வந்தபோது, தனது நான்கு மகன்களையும் இறுக்கமாக கட்டி பிடித்துக்கொண்டு தண்டவாளத்தின் நடுவே நின்றுள்ளார்.
பயத்தில் அலறிய குழந்தைகளின் சத்தம் கண்டு, மனோஜை தண்டாவளத்தில் இருந்து நகர்ந்து செல்லும்படி அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டனர். ஆனால் காதில் வாங்காமல் தண்டவாளத்தில் மகன்களை இறுகபிடித்துக்கொண்டு நின்ற மனோஜ் மீது அதிவேகத்தில் வந்த கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் சிதறிகிடந்த உடல்களை மீட்டனர்.

அப்போது மனோஜின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த துண்டுச்சீட்டில் மனைவியின் செல்போன் எண் இருந்தது. அதன்மூலம் பிரியாவுக்கு போன் மூலம் போலீசார் தகவல் கொடுத்தனர்.
அவரும் விரைந்து சென்று கதறியழுதபடியே தனது கணவர் மற்றும் மகன்களின் உடல்களை அடையாளம் காட்டியது, போலீசார் உட்பட அங்கிருந்த அனைவரின் நெஞ்சையும் உறைய வைத்தது.
மஹதோவின் பாக்கெட்டில் அவரது மனைவியின் தொலைபேசி எண்ணுடன் ஒரு குறிப்பைக் கண்டனர்.
“மஹதோ தனது மனைவி துரோகி என்று சந்தேகித்தார், அதுதான் இந்த தீவிர நடவடிக்கைக்குக் காரணமாக இருக்கலாம்” என்று ரயில்வே காவல்துறை அதிகாரி ராஜ்பால் கூறினார்.
