பச்சை தேயிலையை வீணாக கொட்டும் விவசாயிகள்!

Published On:

| By admin

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலையை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யாததால், அறுவடை செய்த பச்சை தேயிலையை விவசாயிகள் வீணாகச் சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சிறு, குறு தேயிலை விவசாயிகள் 65,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தோட்டங்களில் பச்சை தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், மலைப்பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. தற்போது தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டு உள்ளன. மேலும் தொடர் மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மாதத்தை விட தேயிலை அதிகமாக பறிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பச்சை தேயிலை பறிக்க போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத நிலையும் உள்ளது. இதனால் குறித்த நேரத்தில் தேயிலை அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக தேயிலை முற்றி கரட்டு இலையாக மாறி விடுகிறது. இதை தவிர்க்க விவசாயிகள் பேட்டரியால் இயங்கும் நவீன எந்திரம் மூலம் பச்சை தேயிலை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தேயிலை தொழிற்சாலைகளுக்கு, பச்சை தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. சில தொழிற்சாலைகள் தேயிலை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் தேயிலையை விநியோகிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அறுவடை செய்த பச்சை தேயிலையை சாலையோரம் மற்றும் தோட்டங்களில் வீணாக கீழே கொட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “தொழிற்சாலைகள் பச்சை தேயிலையை கொள்முதல் செய்யாததால், பறித்த தேயிலையை வீணாக கொட்டி வருகிறோம். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share