பனையூரில் 4 மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று (டிசம்பர் 13) சந்திப்பு நடத்தி வருகிறார்.
மக்கள் இயக்க அலுவலகத்துக்கு கருப்பு நிற பேண்ட் ஷர்ட் அணிந்து வந்த விஜய்க்கு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடிகர் விஜய் ஆண்டு தோறும் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார் விஜய்.
தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பிவிட்டதால், இந்த ஆண்டு மாவட்ட வாரியாக மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் சென்னை பனையூரில் நடந்த முதல்கட்ட சந்திப்பில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 13 ) இரண்டாவது கட்டமாக செங்கல்பட்டு, அரியலூர், திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
வந்திருந்த நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி பரிமாறப்பட்டது. இதையடுத்து 3 மணி அளவில் மக்கள் இயக்க அலுவலகத்துக்கு கருப்பு நிற பேண்ட் ஷர்ட் அணிந்து வந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தற்போது அவர்களுடன் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விஜய் ஆலோசித்து வருகிறார்.
அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகளுக்கு மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக்கு பின் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்