சமூக வலைதளங்களின் அபரிமிதமான வளர்ச்சி திரைப்படங்களின் புரமோஷனுக்கு பெருமளவில் உதவிகரமாக இருக்கின்றன.
படம், நடிகர், நடிகைகள் பற்றிய செய்திகள், தகவல்களை சில நொடிகளில் உலகம் முழுவதும் கொண்டு செல்லவும், ட்ரெண்டிங் உருவாக்கவும் வலைதளங்களை திரையுலகம் பிரதானமாக நம்பியுள்ளது.
அதேபோன்று அதனை தவறாக பயன்படுத்துபவர்களால் திரைபிரபலங்களுக்கு நெருக்கடியும், அவதூறும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழலுக்கு உள்ளாகியுள்ளார் இயக்குநர் பாலா அவர் சமூக வலைதளங்கள் எதிலும் இல்லை.
அவர் செல்போன் பயன்படுத்துவதே மிகவும் குறைவு. ஆனால் பாலாவின் பெயரில் பாலசுப்பிரமணியன் பழனிசாமி என்ற கணக்கில் இருந்து இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்க முயற்சிக்கும் ஆர்வமுள்ள இளம் பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசுவதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார்.
இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குநர் பாலாவின் கவனத்திற்கு வந்தன.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான கணக்கை முடக்கும்படியும் இயக்குனர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுவாக எனது திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை எனது உதவி இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்பு கொண்டு வருகிறார்கள். அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக எனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.. விழிப்புணர்வுடன் இருங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இராமானுஜம்