அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனத்தில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தியது அம்பலமானது. fake number plate in ajithkumar lockup death case
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன் குமார் உள்ளிட்ட நான்கு பேரை அழைத்து சென்று தாக்கிய இடங்களில் 5வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், உயிரிழந்த அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தில் போலி நம்பர் பிளேட் இருந்ததை சிபிஐ அதிகாரிகள் இன்று கண்டுபிடித்தனர்.
கோவில் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு இன்று மாலை கொண்டு வரப்பட்ட போலீசார் பயன்படுத்திய டெம்போ வேனை சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்து ஓட்டுநர் ராமச்சந்திரனிடம் விசாரணை செய்தனர்.
அப்போது ஒரே வாகனத்திற்கு இரண்டு பதிவெண்கள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அதாவது சென்னை பதிவெண் TN 01 G 0491 மற்றும் சிவகங்கை பதிவெண் TN 63 G 0491 என இரண்டு நம்பர் பிளேட் ஸ்டிக்கரை பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது.
இதன்மூலம் கொலையை செய்து விட்டு குற்றத்தை மறைக்க அனைத்து சட்டவிரோத செயல்களில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளதை கண்டறிந்த சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.