உலகில் தொழில்நுட்பம் வளர, வளர போலி மோசடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் விதவிதமாக அதிகரித்து வருகிறது. fake ambassador arrested in bungalow and morphing pics
சபோர்கா, பவுல்வியா, லண்டனியா இந்த நாடுகளை யாராவது பார்த்திருப்பார்களா? நிச்சயம் இருக்க முடியாது. ஏன் பூமியை புரட்டி போட்டு அலசி ஆராய்ந்தால் கூட அப்படிப்பட்ட நாடுகளை பார்க்க முடியாது. ஏனென்றால் அப்படிப்பட்ட பெயர்களில் உலகில் எந்த நாடுகளும் கிடையாது.
ஆனால் இப்படிப்பட்ட விதவிதமான பெயரில் ஆடம்பர பங்களாவில் ’தூதரகம் நடத்தி’ வந்த ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவரை உத்தரபிரதேசம் ஸ்பெசல் டாக்ஸ் ஃபோர்ஸ் (STF) போலீஸ் இன்று கைது செய்துள்ளது.
மூக்கில் மேல் மிரள வைக்கும் வகையில் கட்டப்பட்ட பங்களா, வரிசைக்கட்டி வாசலில் நிற்கும் சொகுசு கார்கள், விலையுயர்ந்த கைகடிகாரங்கள், கட்டுக்கட்டாக பணம் என ஒற்றை பங்களாவை தூதரகமாக மாற்றி வலம் வந்துள்ளார் ஹர்ஷ் வர்தன்.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கவி நகரில் உள்ள ஒரு பங்களா வாடகை எடுத்து அதனை ‘தூதரகமாக’ மாற்றியுள்ளார் ஹர்ஷ்வர்தன்.
மேலும் மைக்ரோ நேஷன்ஸ் என மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பவுல்வியா, லண்டனியா போன்ற போலி நாடுகளின் தூதராக ஜெயின் தன்னை காட்டிக்கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய உளவுத்துறையின் தகவலின் பேரில் எஸ்.டி.எஃப் குழு போலி தூதரக பங்களாவில் நேற்று சோதனை நடத்தியது.
அப்போது, போலி நம்பர்கள் கொண்ட ஆடி, மெர்சிடிஸ் என நான்கு சொகுசு கார்கள், ‘மைக்ரோநேஷன்’ நாடுகளின் 12 ராஜதந்திர பாஸ்போர்ட்டுகள், வெளியுறவு அமைச்சகத்தின் முத்திரைகள் தாங்கிய போலி ஆவணங்கள், இரண்டு போலி பான் கார்டுகள், பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் முப்பத்தி நான்கு போலி சீல்கள், இரண்டு போலி பிரஸ் கார்டுகள், ரூ.44.7 லட்சம் ரொக்கம், விலையுயர்ந்த 12 கைகடிகாரங்கள் மற்றும் பல நாடுகளின் வெளிநாட்டு நாணயம் ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், பிரதமர் மோடி ஆகியோருடன் நிற்பது போன்ற மார்ஃபிங் புகைப்படங்களை கண்டு போலீசாரே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தொடர்ந்து அவரை கைது செய்து கவி நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

ஹவாலா நெட்வொர்க்…
ஹர்ஸ்வர்தன் இந்த போலி தூதரகத்தை 2017 முதல் நடத்தி வருவதாகவும், வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதாக உறுதியளித்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஏமாற்றி ஜெயின் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஷெல் நிறுவனங்கள் மூலம் பெரும் ஹவாலா நெர்வொர்க்கையும் அவர் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளூர் மக்களின் சந்தேகம் எழாமல் இருக்க, அவர்களுக்கு தனது பங்களா முன்பு ஆண்டுக்கு 5 முறை உணவு வழங்கி வந்துள்ளார்.
ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டில், சட்டவிரோத செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்ததற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளனர்.
மேலும் சர்ச்சை சாமியாரான சந்திரசாமி மற்றும் சர்வதேச ஆயுத வியாபாரி அட்னான் கஷோகி ஆகியோருடன் சந்தேகிக்கப்படும் தொடர்பில் இருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

யார் இந்த சந்திரசாமி?
தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்ட சந்திரசாமி, 80கள் மற்றும் 90களில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அதனால் அவர் பி.வி. நரசிம்ம ராவ், சந்திர சேகர் மற்றும் வி.பி. சிங் ஆகிய மூன்று பிரதமர்களின் ஆன்மீக ஆலோசகராகக் கருதப்பட்டார். நிதி முறைகேடுகளுக்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு 1996 இல் கைது செய்யப்பட்டார். அவரது ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கஷோகியுடனான பரிவர்த்தனைகளும் வெளிவந்தன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு நிதியளித்ததாக சந்திராசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. அத்தகைய நபர்களுடன் ஹர்ஸ் வர்தன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த மோசடி வழக்கில் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
