திரைப்படத்தின் வியாபாரத்தை அதிகரிக்கவும், எதிர்பார்ப்பை எகிற செய்யவும் சினிமாகாரர்களால் உருவாக்கப்பட்ட பெயர்தான் “பான் இந்தியா” என்கிற வார்த்தை என்பதை சினிமா வியாபாரம் பற்றிய ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களால் கூறப்பட்டு வருகிறது.
இதனை பகிரங்கமாக பொதுவெளியில் கூறுவதற்கு, விமர்சிப்பதற்கு திரைக்கலைஞர்களிடம் தயக்கம், பயம் இருக்கிறது.
அதென்ன பான் இந்தியா படம் : அமீர்
இதனை திரைப்பட விழா ஒன்றில் இயக்குநர் அமீர் பேசிய போது ”பான் இந்தியா படம் என்று கூறுவது இப்போது பேஷனாகி விட்டது. நாற்பது வருடங்களுக்கு முன்பே மொழிமாற்றம் செய்யாமலே ஷோலே, பாபி, டான் போன்ற இந்திப் படங்களும், ஆங்கில படங்களும் 100 நாட்களை கடந்து தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ஓடியிருக்கிறது. மக்களை கவரக்கூடிய எந்தவொரு மொழிப்படமும் வெற்றி பெறும். அது அந்த படத்தின் கதைக்கான வெற்றி தானே தவிர, அதனால் அந்த படத்தில் நடித்த நடிகர்கள் அகில இந்திய நட்சத்திர நாயகனாக மாறிவிட முடியாது” என்றார்.
அப்படில்லாம் சொல்ல முடியாது : பகத்
அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் வெற்றி பெற்ற ‘புஷ்பா’ திரைப்படம் பான் இந்திய நடிகராக என்னை அடுத்த உயரத்திற்கு எடுத்து போய்விட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது என்று கூறியிருப்பது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘புஷ்பா2 தி ரூல்’ஆகஸ்ட் 15 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் திரையரங்குகள் மூலம்உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக மொத்த வசூல் செய்தது. பாகுபலி, கேஜிஎப் போன்று இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு சினிமா பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருப்பார். இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை விட அவரின் காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தைப் போலவே ‘புஷ்பா 2’ திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
நேர்மையாக இருக்க விரும்புகிறேன்!
இந்த நிலையில், ‘புஷ்பா’ திரைப்படம் குறித்து நடிகர் பகத் பாசிலிடம், “பான் இந்திய நடிகராக உங்களை உயர்த்திக் கொள்ள ‘புஷ்பா’ திரைப்படம் உதவியிருக்கிறதா?” என தொலைக்காட்சி பேட்டியில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “இல்லை” என்று கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
பகத் பாசில் அந்தப் பேட்டியில் மேலும் பேசுகையில், “இதுபற்றி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். இயக்குநர் சுகுமாரிடமே இதுபற்றி நான் பேசியிருக்கிறேன். என்னுடைய பணியை ‘புஷ்பா’ படத்தில் குறைவாகச் சொல்லவில்லை.
இந்தப் படத்திற்குப் பிறகு ரசிகர்கள் என்னிடம் இருந்து மேஜிக் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நிச்சயம் இல்லை. நான் அந்தப் படம் ஒத்துக்கொண்டதற்கு காரணம் சுகுமார் மேல் வைத்திருந்த அன்பு மட்டுமே. என்னுடைய கவனம் முழுவதும் மலையாள சினிமா மீது மட்டும்தான். அதனால், ‘புஷ்பா’ திரைப்படம் பான் இந்திய நடிகராக என்னை அடுத்த உயரத்திற்கு எடுத்து போய்விட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது” என கூறியிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
அட்டகாச அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ‘கூகுள் பிக்சல் 8A’!
”நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் முன் இதை செய்யுங்கள்” : சாய்னா நேவாலுக்கு அமைச்சர் பதில்!