தடுப்பூசி: மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுத்துமா?

Published On:

| By Balaji

மாதவிடாய்க்கு 5 நாட்கள் முன்னரோ அல்லது பின்னரோ பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கட்டுப்பாடு நடவடிக்கைகளையும், மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்துவதற்கு கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆரம்ப கட்டத்திலிருந்தே தடுப்பூசி குறித்த தவறான தகவல் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. இதனால், பலரும் தடுப்பூசி செலுத்துவதற்கு பயப்படுகிறார்கள். சிலர் தடுப்பூசியை வேண்டவே வேண்டாம் என்கிறார்கள். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், தடுப்பூசி குறித்த வதந்தி குறைந்தபாடில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுவதாகவும், இதனால் மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும், மாதவிடாய் நேரத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால், தடுப்பூசி அவர்களை மோசமாக பாதிக்கக்கூடும் என்று தகவல் பரவி வருகிறது.

இந்த தகவலில் உண்மை இல்லை என மறுத்துள்ள மத்திய அரசு, அதுகுறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு முன்னும் பின்னும் 5 நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கூடாது என்பது வதந்தியே. உண்மை இல்லை. வதந்திகளால் விழுந்து விடாதீர்கள்! மே1ஆம் தேதி முதல் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதற்கான முன்பதிவு 28ஆம் தேதி முதல் தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மாதவிடாய் காலத்தில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்பதற்கான எந்த தகவலும் இல்லை என்கின்றனர்.

ஒரு மருந்து, மாதவிடாய் காலத்தில் பெண் உடலில் எப்படிச் செயல்படும் என்ற தெளிவான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளவில்லை. 1993ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் ஆய்வுகளில் பெண்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி முதல் எல்லா மருந்துகளும் பெண்களின் உடலில் எப்படிச் செயல்படும் என்ற தெளிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

**வினிதா**

.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share