ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பளுதூக்குதல் போட்டியில் இந்திய அணி மொத்தமாக 9 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21ஆவது காமன்வெல்த் தொடரில் இந்திய அணி பளுதூக்குதல் போட்டியில் தொடர்ச்சியாக பல பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக பளுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்ட 38 நாடுகளில் இந்திய அணியே அதிக வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமாக 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கம் என மொத்தமாக 9 பதக்கங்களை வென்று இந்திய அணி முதலிடம் பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் மீராபாய் சானு (48 கிலோ), சஞ்சிதா சானு(53), சதீஷ் சிவலிங்கம்(77), வெங்கட் ராகுல் (85), பூனம் யாதவ் (69), பிரதீப் சிங் (105), குருராஜா (56), தீபக் லதேர் (69) மற்றும் விகாஸ் தாகூர் (94) ஆகியோர் பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர். இதனால் கடந்த 1990ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்கு பின்னர் பளுதூக்குதல் போட்டியில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.

இதுதவிர பேட்மிண்டன் கலப்பு குழு பிரிவு ஆட்டம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் குழு பிரிவு போட்டிகளிலும், துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் இந்திய அணி பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது. இதுவரை மொத்தமாக இந்திய அணி 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கம் வென்று 19 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
