நடப்பது போலீசு ஆட்சி: மக்கள் அதிகாரம்!

Published On:

| By Balaji

கருத்துரிமை, ஜனநாயக உரிமையை மறுக்கும் போலீசு என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (ஜூலை 13) செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்தவரும், ‘மூடு டாஸ்மாக்கை’ என்ற பாடலை பாடி தேச துரோக வழக்கில் கைதான பாடகருமான கோவன், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ ,மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ADVERTISEMENT

அப்போது பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, “இந்த பத்திரிகையாளர் சந்திப்பு மிக முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். காராணம், ஜனநாயகத்தின் நான்கு தூண்கள், சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் ஊடகம். இவர்கள் தான் ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடியவர்கள். அந்த கருத்துரிமை, ஜனநாயக உரிமைகளுக்கு விளக்கம் சொல்லக்கூடியவர்கள். இன்று கருத்து சுதந்திரமும் ஜனநாயக உரிமையும் காவல்துறையினர் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தடியெடுத்தவன் தண்டல்காரன் போல போலீசார்கள் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள உளவு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இங்கு நடப்பது போலீசு ஆட்சிதான். இதற்கு நிறைய ஆதாரங்களை தொகுத்து இந்த பத்திரிக்கை செய்தியுடன் கொடுத்திருக்கிறோம்.

உதாரணமாக ஹைட்ரோ கார்பன் வேண்டாம், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுத்தால் அங்கு வாழக்கூடிய 50 லட்ச மக்கள் அகதிகளாக வெளியேற்றப்படுவார்கள் என அந்த பகுதி விவசாயிகள் அனைத்து பிரதான எதிர்க்கட்சிகள் சுற்றுச்சூழல் அறிஞர்கள் ஆகியோர் ஆதாரப்பூர்வமாக பேசி வருகிறார்கள். இந்த அரசினுடைய திட்டங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கான தவறு என பேசுவதற்கு, அதை வேண்டாம் என சொல்வதற்கு கருத்துரிமை ஜனநாயக உரிமை தடை செய்யப்படுகிறது. இதை தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்” என்றார்.

ADVERTISEMENT

மேலும் பேசிய அவர், “அரசினுடைய கொள்கையை அதன் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வது தான் ஜனநாயகத்தினுடைய அடிப்படையான கூறுகள். ஆனால் அப்படி பேசுவதை குற்றம் என்கிறது தமிழக அரசின் காவல்துறை. ஒரு வழிப்பறை, திருட்டு, கொலை, கொள்ளையில் ஈடுபடக்கூடிய சமூக விரோத கிரிமினல்களையும், உரிமைகளுக்காக மக்கள் நலனுகளுக்காக போராடுபவர்களையும் ஒரே மாதிரி போலீசு அனுகுவது மிகமிக தவறு. இது பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இப்படி நடக்கவில்லை. திருச்சி மாநாட்டில் கோவன் என்ன பாடல் பாட போகிறார் என முன்னரே காவல்துறையினர் கேட்கின்றனர். இது ஜனநாயகமா?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பின்னர், பாடகர் கோவன், ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவு பற்றி பாடல் ஒன்றை பாடினார்.

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share