ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 27 ) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
நாளை (ஆகஸ்ட் 28) நடக்கும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல் ராகுல் கூறும்போது,
”பாகிஸ்தான் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விளையாட நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இது போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் அணியை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருப்பது உற்சாகமாக இருக்கிறது.

அதோடு இந்த தொடரில் நமக்கு நாமே சவால் விடவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. கடந்த முறை டி20 உலகக்கோப்பை தொடரின் போது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று தொடரினை சிறப்பாக ஆரம்பிக்க நினைத்தோம்.
ஆனால் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததை நினைத்து இன்னும் எனக்கு வருத்தமாக உள்ளது. நிச்சயம் நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுப்போம் என்றார்.
மேலும் பாகிஸ்தான் வீரர் ஷாஹீத் அப்ரிடி குறித்துப் பேசிய கே.எல்.ராகுல், “அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்.
அவர் ஆசியக் கோப்பையில் விளையாடியிருந்தால், டி20 உலகக் கோப்பைக்கு நல்ல பயிற்சியாக இருந்திருக்கும். அவர் விளையாடாதது எங்களுக்கு ஏமாற்றம்தான்” என்றார்.
விராட் கோலிக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்துள்ளது. நிச்சயம் அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்தி மிகச் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவார் என்றும் ராகுல் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்திய கிரிக்கெட்டை வளமாக அமைக்க ரோஹித் சர்மாவின் புதிய திட்டம்!
