முன்னாள் டிஜிபி கொலை : மனைவியின் பகீர் வாக்குமூலம்!

Published On:

| By Kavi

முன்னாள் டிஜிபி ஓம்.பிரகாஷ் கொலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ex dgp om prakash murder

பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓம்.பிரகாஷ்(68). 1981 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கர்நாடக மாநிலத்தில் பணியாற்றினார். ஐஜியாகவும், டிஜிபியாகவும் பணியாற்றிய இவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்,

தனது மனைவி, மகளுடன் பெங்களூருவில் உள்ள ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட் பகுதியில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஞாயிறு அன்று வீட்டில் இருந்த முன்னாள் டிஜிபி ஓம்.பிரகாஷ் கொலை செய்யப்பட்டார்.

முன்னாள் டிஜிபி என்பதால் அவரை பழிவாங்கும் நோக்கில், அவரால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட யாரேனும் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், ஓம்.பிரகாஷின் மகன் கார்த்திகேஷ் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

அதில் தனது அப்பாவை கொலை செய்தது தனது அம்மாவும், சகோதரியும் தான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கார்த்திகேஷ் அளித்த புகாரில், “எனது சகோதரியும் அம்மாவும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் தினமும் அப்பாவுடன் சண்டையிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் எனது அப்பா வீட்டை விட்டு வெளியேறி அவரது சகோதரி சரிதா குமாரி வீட்டில் தங்கியிருந்தார். ஆனால் எனது சகோதரி கீர்த்தியும், தாயார் பல்லவியும் போன் செய்து சண்டையிட்டனர்.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கீர்த்தி, அப்பா தங்கியிருந்த எனது அத்தை வீட்டுக்கு சென்று அவரை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

கடந்த 20ஆம் தேதி டோம்லூரில் நான் வேலையில் இருந்தபோது எனது குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டின் பக்கத்துவீட்டுக்காரர், என் அப்பா கொலையான செய்தியை தொலைபேசியில் அழைத்து சொன்னார்.

நான் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அப்பா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவருக்கு அருகில் கத்தி உடைந்த பாட்டில்கள் எல்லாம் கிடந்தன. அப்பாவை தாயார் பல்லவியும், சகோதரி கீர்த்தியும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இருவரும் வீட்டில் எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருந்ததால் தான் தனியாக வசித்து வந்ததாகவும் கார்த்திகேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று (ஏப்ரல் 21) பல்லவியையும், கீர்த்தியையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ex dgp om prakash murder

இந்த கொலை குறித்து கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் கூறுகையில், “கொலை நடந்த அன்று பல்லவிக்கும் முன்னாள் டிஜிபிக்கும் கடுமையாக சண்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனது பொறுமையை இழந்த பல்லவி ஓம்.பிரகாஷ் முகத்தில் மிளகாய் பொடி தூவி கத்தியால் தாக்கி, பாட்டிலை உடைத்து குத்தியுள்ளார்.

அதோடு ரத்த வெள்ளத்தில் தனது கணவர் கீழே கிடந்தபோது பல்லவி தனது நண்பருக்கு தொடர்பு கொண்டு, நான் அரக்கனை கொன்றுவிட்டேன் என்று மகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். அவர், ஸ்கிசோஃப்ரினியா என்ற தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்று தெரிவிக்கின்றனர்.

இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், பல்லவி ஒருவாரத்துக்கு முன்னதாக கழுத்தில் எந்த நரம்பில் வெட்டினால் உடனே உயிரிழப்பு ஏற்படும் என கூகுளில் தேடியிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தசூழலில் போலீஸ் விசாரணையில், முன்னாள் டிஜிபியான ஓம்.பிரகாஷ் துப்பாக்கியை எடுத்து வந்து என்னையும் எனது மகளையும் மிரட்டுவார். கடந்த ஞாயிறு அன்றும் எங்களை கொலை செய்ய முயன்றார். எங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓம்.பிரகாஷிடம் போராடிய போதுதான் இப்படி நடந்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் பல்லவி.

பல குற்ற வழக்குகளை கையாண்ட முன்னாள் டிஜிபியின் கொலை வழக்கில் இப்படி பல்வேறு தகவல் வெளியாவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ex dgp om prakash murder

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share