மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை 100 சதவிகிதம் விவிபேட் ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
100 சதவிகிதம் ஒப்புகைச் சீட்டுக்களை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் இன்று (ஏப்ரல் 24) காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “மைக்ரோ கன்ட்ரோலர் கண்ட்ரோலிங் யூனிட்டில் நிறுவப்பட்டுள்ளதா அல்லது விவிபேடில் உள்ளதா?
மைக்ரோ கண்ட்ரோலர் ஒரு முறை மட்டுமே நிரல்படுத்தக்கூடியதா? அல்லது அடுத்தடுத்து பயன்படுத்த கூடியதா?
ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எத்தனை சின்னங்களை அனுமதிக்க முடியும்?
தேர்தல் மனுக்களுக்கான வரம்பு 30 நாட்கள் என்று கூறப்பட்டது, எனவே தரவு 45 நாட்களுக்கு சேமிக்கப்படுகிறது. ஆனால் RP சட்டத்தின்படி, வரம்பு காலம் 45 நாட்கள். எனவே சேமிப்பிற்கான காலத்தை அதற்கேற்ப அதிகரிக்க வேண்டியிருக்குமா?
கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளதா அல்லது VVPAT தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளதா?” ஆகிய கேள்விகளை எழுப்பி வழக்கை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.
பின்னர், வழக்கு விசாரணை மீண்டும் மதியம் 2 மணிக்கு துவங்கியது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளது. அவற்றை நாம் அணுக முடியாது.
மைக்ரோ கண்ட்ரோலர்களில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. தேர்தலுக்கு பிறகு மூன்று இயந்திரங்களும் சீல் வைக்கப்படும்
எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களில் விவிபேட் இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி, விவிபேட் இயந்திரத்தில் 5000-க்கும் மேற்பட்ட சின்னங்களை பொருத்த முடியும்.
வாக்குப்பதிவிற்கு பிறகு இவிஎம் மெஷின் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் 45 நாட்கள் சட்டப்பூர்வமாக சேமிக்கப்படும். இந்த காலக்கெடு முடிந்ததும் தேர்தல் மனுக்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய தலைமை தேர்தல் அதிகாரி உயர்நீதிமன்றங்களுக்கு கடிதம் எழுதுவார். இல்லையெனில் அவை சேமிப்பகத்திலிருந்து அகற்றப்படும்” என்று பதிலளித்தார். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video: பிறந்தநாளில் ரக்ஷிதா சொன்ன நல்ல செய்தி… ரசிகர்கள் வாழ்த்துமழை…!
ஸ்மோக் பிஸ்கட் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!