தேர்தலை மனதில் வைத்துதான் தற்போது கூடுதல் மகளிருக்கு உரிமைத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார் என்று எதிர்க்கட்சியான அதிமுக விமர்சனம் செய்துள்ளது.
கடந்த 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் மாதம் தோறும் 1000 ரூபாய் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கூடுதல் மகளிருக்கு இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் இன்று முதல் மேலும் 17 லட்சம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கான விழா வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்தசூழலில் எதிர்க்கட்சியான அதிமுக, எல்லாம் தேர்தலை மனதில் வைத்துதான் நடக்கிறது என்று விமர்சித்துள்ளது.
இதுகுறித்து இன்று (டிசம்பர் 12) அதிமுக எக்ஸ் பக்கத்தில், “குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என அடிக்கடி முழங்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்களே! எப்போது கொடுத்தீர்கள்.?
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் உரிமைத்தொகை கொடுத்தீர்கள்.
இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு என அறிவித்து விட்டு அதிலும் 13 லட்சம் பேரை தவிர்த்து விட்டு 17 லட்சம் பேருக்கு மட்டும் விதிகளைத் தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளீர்கள். இது இன்னும் எவ்வளவு மாதம் கொடுக்க முடியும்? வெறும் நான்கு மாதங்கள் மட்டும்தான்,
அப்படியென்றால் மீதமுள்ள 56 மாதங்களுக்கான உரிமைத்தொகை? தற்போதும் திமுக அரசு குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் விதியைத் தளர்த்தி 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து தான்,மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல. உங்கள் நாடகம் மக்கள் அறியாமல் இல்லை. உங்களுக்கான முடிவுரையை மக்கள் எழுதாமல் இருக்கப் போவதும் இல்லை” என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
