ADVERTISEMENT

இதுதான் இலக்கு… அனைவரும் செந்தில் பாலாஜிக்கு துணையாக இருக்க வேண்டும் : ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

முப்பெரும் விழா ஏற்பாடுகளுக்கு அனைவரும் செந்தில் பாலாஜிக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று (செப்டம்பர் 9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

ADVERTISEMENT

அதில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், கலந்துகொண்டு பேசினார்.

அவர் கூறுகையில், “கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்,படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிடுவதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றேன்.

ADVERTISEMENT

இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு முன்,இது ‘ஹிட்’ அடிக்கும் என்று சொன்னேன்.சொன்ன மாதிரியே, 15,516 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து ‘சூப்பர் ஹிட்’அடித்துள்ளது.

என்னுடையபயணங்கள் ஹிட் ஆவதற்குக் காரணம், நான் மட்டுமல்ல; எனக்குப் பக்கபலமாக இருக்கும்நீங்களும்தான் காரணம்! நீங்கள் இல்லாமல் நான் இல்லை; கோடிக்கணக்கான உடன்பிறப்புகளும் –தமிழ்நாட்டு மக்களும் இல்லாமல் நான் இல்லை!

ADVERTISEMENT

தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும் என்ற இலக்கை நாம் விரைந்து அடையவேண்டும் என்றால், இந்தப் பயணங்களில்வெற்றியடைந்தால் மட்டும் போதாது.

வரவிருக்கும் 2026 தேர்தலிலும் வெற்றியைப் பெறவேண்டும்! இதற்கான அடித்தளமாகத்தான், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பைக் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் நாள் தொடங்கினோம்.

சர்வாதிகார மனப்பான்மையோடு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக,தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க, தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க நீங்கள் எல்லோரும் களத்தில் சிறப்பாகப் பணியாற்றினீர்கள்.

மக்களின் நம்பிக்கையைப் பெறக் களத்தில் பணியாற்றிய அத்தனை நிர்வாகிகளிடமும், நான் பாராட்டினேன் என்று சொல்லுங்கள். ஏனென்றால், நான் மகிழ்ச்சியோடு சொல்றேன்… ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்துள்ளோம்.

உங்கள் எல்லாருக்கும் – ஏன், உங்கள் மூலமாக கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொல்கிறேன்… தேர்தல் முடியும் வரைக்கும்“ஓய்வு” என்ற சொல்லையே மறந்துவிடுங்கள்!ஏனென்றால், 2026-ல் நாம் பெறப்போகும் வெற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கான வெற்றி!

எப்படிப்பட்ட ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கிறதென்று சாதாரணமாக டீக்கடையில் பேப்பர் படிப்போர் கூட உணர்ந்திருக்கிறார்கள். ஃபேக் நியூஸ் – டைவர்ஷன் பாலிட்டிக்ஸ்-என்று மக்களைக் குழப்ப எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்; அதுதான் அவர்களால் முடியும்.மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் துணையோடு தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க நம்மால்தான் முடியும்! அதற்கான வலிமையை நாம் பெறப்போகும் நாள்தான்,வரும் செப்டம்பர் 17. முப்பெரும் விழா!

அதற்கு முன், நம்மையெல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாள், 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் – அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து, BLA, BDA, BLC-களின் கூட்டங்களை நடத்த வேண்டும். இது நிறைவு விழா கூட்டம் இல்லை; இதுதான் தொடக்கவிழா கூட்டம்!

தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக – ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நம்மோடு இணைந்திருக்கும் எல்லோரையும் – தேர்தல் வரைக்கும் நம்முடனே இணைத்துக்கொண்டு களப்பணியாற்ற வேண்டும். அதற்கான உறுதிமொழியை அந்தக் கூட்டங்களில் எல்லோரும் எடுக்க வேண்டும்.

முப்பெரும் விழாவில் – உடன்பிறப்புகள் அனைவரையும் ஒருசேர ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் கரூர் நோக்கி திரண்டு வருவார்கள்.

எல்லோரும் பாதுகாப்பாகவந்து போவதை உறுதிசெய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும். மேற்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் – மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி, விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். அத்தனை மாவட்டக் கழகச் செயலாளர்களும் செந்தில் பாலாஜி துணையாக இருக்கவேண்டும்.

முப்பெரும் விழா முடிந்த பிறகு, செப்டம்பர் 20-ஆம் நாள், ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும்.

நமது அரசின் திட்டங்களால், மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணர்வை அப்படியே தேர்தல் வரைக்கும் எடுத்துச் சென்று அறுவடை செய்ய ஒவ்வொருவரும் களத்தில் தீவிரமாகப்பணியாற்ற வேண்டும். அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே!

அதற்கு நான் உங்களிடம் கேட்பது ஒன்றேஒன்றுதான், தேர்தல் நாள் வரைக்கும் பசி – தூக்கம் – ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள்! ஓய்வறியாச் சூரியனாகஉழைப்போம்! 2026-லும் நாமே உதிப்போம்!” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share