தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று (ஏப்ரல் 1) பொதுப்பணித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ev velu share the kumar glass bridge making
அப்போது கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலம் கட்டப்பட்டதன் பின்னணி குறித்து எ.வ.வேலு விவரித்து பேசினார்.
அவர் பேசுகையில், “கன்னியாகுமரியில் – விவேகானந்தர் நினைவு இல்லத்தையும் – அய்யன் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் கடலில் நடை மேம்பாலம் கட்ட 2016ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை மூலம் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியது.

மாநில அரசின், பல துறைகள் ஆய்வுக்கு பின், முடியாது என்ற நிலையில் தான் 2020ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு பணி ஒப்படைக்கப்பட்டது. அங்கும், 2 ஆண்டுகாலம் கிடப்பில் கிடந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் நெடுஞ்சாலைத் துறையின் ஆய்வு கூட்டத்தை நடத்திய போது, ”இந்த பாலத்திட்டம் இவ்வளவு நாள் ஏன் கிடப்பில் போடப்பட்டது” என்ற வினாவை எழுப்பினார்? அப்போது நிலைமைகளை எடுத்துச் சொன்னோம்.
“முயற்சி திருவினை ஆக்கும்” “எண்ணித் துணிக கருமம்” என்று முதல்வர் அறிவுரை வழங்கினார்.
அதன் தொடர் முயற்சியால், எனது தலைமையில் தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், I.I.T பேராசிரியர்களின் முழு ஒத்துழைப்புடன், 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட “கண்ணாடி இழைப்பாலம்” கடலின் நடுவே “நெட்வொர்க் ஆர்ச் பிரிட்ஜ் நவீன முறையில் 64 மெக்காலே கம்பிகள் பயன்படுத்தி கட்டப்பட்டு, 2024 டிசம்பர் மாதம் 30ந் தேதி முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

சீனாவில் “ஜாங் ஜியாஜியில்” மலைப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. வியட்நாமில், “மோக் சாங்” தீவில் கண்ணாடிப் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்தியாவில், பீகார், வனப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவிலேயே கடல் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரே “கண்ணாடி இழைப் பாலம்“ தமிழ்நாட்டில் மட்டும் தான். கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை 6.31 இலட்சம் சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்துள்ளனர்.
உலக சுற்றுலாப் பயணிகள் வியக்கத்தக்க வகையில் குமரியின் புதிய அடையாளமாக கண்ணாடி இழைப்பாலம் திகழ்கிறது. இதற்கு காரணமான, தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என எ.வ.வேலு பேசினார்.
