எத்தியோபியாவில் 12000 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக வெடித்து சிதறிய எரிமலை சாம்பல் இந்தியாவை சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அபார் என்ற மாகாணத்தில் கேலி குப்பி என்ற எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம்(நவம்பர் 23) வெடித்தது. வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்புக் கடல் வழியாக ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நாடுகளில் பரவியது. பின்னர் வடக்கு ஐரோப்பிய கடல் பகுதியை தாண்டி இந்த சாம்பல் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் குஜராத், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வளிமண்டலத்தின் காற்றுடன் சாம்பல் மேகங்கள் நகர்ந்து வருகின்றது.
இந்த சாம்பல் புகை இந்தியாவை பாதிக்கும் என்பதால் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விமான நிறுவனங்கள் சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் ஆகாசா ஏர், இண்டிகோ, கே.எல். எம் ஆகிய விமான நிறுவனங்கள் தங்களது சில விமான சேவைகளை ரத்து செய்துள்ளனர். இதுவரை 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த கரும்புகை டெல்லியில் இருந்து சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இன்று மாலை 7.30 மணியளவில் டெல்லியில் இருந்து விலகிச் செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சாம்பல் புகை மேலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று டெல்லி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் கடல் மட்டத்தில் இருந்து வெகு தொலைவில் சூழ்ந்துள்ளதால், மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
