இஸ்ரேல் – காசா போர் உச்சமடைந்து வருகிறது. மீண்டும் தொடங்கியுள்ள இஸ்ரேலின் தாக்குதலால் 6 நாட்களில் 600 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஹமாஸின் மூத்த தலைவர் சலா அல்-பர்தாவில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். Escalating Israel-Gaza War
அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம், அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்ய ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தையால் தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியது இஸ்ரேல் – காசா போர். இந்த மாதம், அடுத்த கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்க இருந்த சமயத்தில், சமீபத்தில் போர் நிறுத்தத்தை பின்பற்றாமல் காசா மீது தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.
`பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை’ என்பதைக் காரணமாக கூறிய இஸ்ரேல், கடந்த 6 நாட்களாக தொடர்ந்து காசாவின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் முக்கிய தலைவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவின. இந்தத் தகவலை தற்போது உறுதி செய்துள்ளது ஹமாஸ் அமைப்பு.

நேற்று (மார்ச் 23) அதிகாலையில் காசாவின் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் மூத்த தலைவர் சலா அல்-பர்தாவில் உயிரிழந்துள்ளார். இவர் மட்டுமல்லாமல், இந்தத் தாக்குதலில் இவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை முதல், இஸ்ரேலால் கிட்டதட்ட 600 பாலஸ்தினீயர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு, பதிலடி கொடுக்க ஹமாஸ் தொடங்கினால், மீண்டும் இஸ்ரேல் – காசா போர் உச்சமடையும் என்று தெரிகிறது. Escalating Israel-Gaza War
இந்த நிலையில், பாலஸ்தீன மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் காஸா பகுதியில் ஹமாஸ் படைப் பிரிவுக்கு எதிரான சண்டையில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 50,000-த்தைக் கடந்துவிட்டதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.