ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரம் சார்ந்த தொழில், அதனை நம்பி வாழ்க்கையை நடத்தும் தொழிலாளர்கள் பற்றிய திரைப்படம். படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் பிரபாகரன் நாயகனாக நடிக்க, மேக்னா நாயகியாக நடிக்க வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, டி.எஸ்.ஆர், ஜி.பி.முத்து, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.‘
பனை’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வைரமுத்து தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பேரரசு, அரவிந்தராஜ், கவிஞர் சொற்கோ, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
பொதுவாக தமிழ் சினிமாவில் திரைப்படம் சார்ந்து படத் தொடக்க விழா, இசை வெளியீடு, வெற்றி விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாக்களில் படத்தை பற்றி பேசுவதை காட்டிலும் படத்திற்கு சம்பந்தமில்லாதவற்றை திரைக்கலைஞர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசுவது வாடிக்கை. இதனால் அந்தப் படம் பற்றிய முக்கியத்துவம் வலுவிழந்துவிடும்.
ஆனால் ‘பனை’ படத்தின இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்க தலைவர் விக்கிரமராஜா சம்பிரதாயமாக வாழ்த்தாமல் படத்தின் தலைப்பு அது சார்ந்த வாழ்க்கை முறை, அதனை புறக்கணித்து நவீனத்துக்கு மாறிய சமூகம் இழந்ததை கோடிட்டு காட்டி பேசினார்.
பனைக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது!
அவர் பேசுகையில், “பனை மரம் என்பது என்பது ஒரு காலத்தில் சாதாரணமாக இருந்தது. அப்போது பனை பொருட்களை பயன்படுத்துபவர்கள் ஏழைகள். அப்போது அரிசி சோறு சாப்பிடுபவர்கள் பணக்காரர்கள், கம்ப கூழ், கேப்பங்கூழ் சாப்பிடுபவர்கள் ஏழைகள். ஆனால், இன்று கம்ப கூழ், கேப்பங்கூழ் சாப்பிடகிறவர்கள் பணக்காரர்கள், அரிசி சோறு சாப்பிடுகிறவர்கள் ஏழைகள். அதுபோல் தான் பனைக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது.
பனை மரம் என்பது நாங்கள் ஆண்டு அனுபவித்தவர்கள். 30 வருடங்களாக பனை பொருட்களை உண்டு, குடித்து நான் வாழ்ந்திருக்கிறேன். பனை மரத்தின் ஓலையில் செருப்பாக பின்னி பயன்படுத்துவோம், பனை நாரை கொண்டு கயிறுக்கு பதிலாக பயன்படுத்தி கட்டில் செய்து படுப்போம், குளிர்ச்சியாக இருக்கும். எல்லா வகையிலும் பனை பயன்பெறும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பனக்கெழங்கு சாப்பிட்டால் கேன்சர் வராது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு இருந்த உணவு, சுகாதாரம் இன்று இல்லாமல் போய்விட்டது.
வியாபாரிகள் கலப்படம் செய்கிறீர்களா?
இந்த படத்தின் பாடல் வரிகளில் கவிப்பேரரசு எழுதியிருக்கிறார், வியாபாரிகள் பனைவெல்லத்தில் கலப்படம் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.
வியாபாரிகள் கலப்படம் செய்யவில்லை, அதற்கு சட்டமே இருக்கிறது. இன்று கலப்படம் இல்லாத எண்ணெய் சாப்பிடுபவர்கள் இருக்கிறீர்களா?, இன்று பாமாயில் எண்ணெய் விலை கூடினால் தேங்காய் எண்ணெய் விலை கூடும், கடலை எண்னெய் விலையும் கூடும்.
அப்படியானால் என்ன அர்த்தம், பாமாயில் கலந்தால் தான் தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய். சட்டம் சொல்லுது இனிப்போட இனிப்பை கலந்துகொள்ளலாம் என்று. அதனால் தான் நாங்க இன்று பனைவெல்லம் சாப்பிட வேண்டும் என்றால், ஊரில் ரூ.360 கொடுத்து ஒரு கிலோ வாங்குகிறோம். ஆனால், இங்கு ரூ.160-க்கு ஒரு கிலோ பனைவெல்லம் விற்கிறார்கள், அது பனை வெல்லம் இல்லை, சர்க்கரையோடு கலந்த பனைவெல்லம்.
நம் ஆட்களின் உடம்பில் வலு இல்லை!
பதநீர் என்பது அவ்வளவு வலிமையை கொடுக்கும் உணவு. நான் இளமையில் பசிக்காக பதநீர் குடித்தேன், அதன் பிறகு தான் தெரிந்தது, 120 கிலோ உப்பு மூட்டையை தூக்குகிற அளவுக்கு என் எலும்பு மற்றும் தசைக்கு வலிமை கொடுத்தது பதநீர் என்பது தெரிந்தது.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மை இல்லை, இங்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது. இங்கு வட இந்திய இளைஞர்களுக்கு தான் வேலை கொடுப்பதாக சொல்கிறார்கள், என்னிடமே பலர் கேட்கிறார்கள். ஆனால், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வேலை செய்வதற்கு நம் ஆட்களின் உடம்பில் வலு இல்லை. அதனால் தான் வட இந்தியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கு காரணம் நம் உணவு முறை மாற்றம்.
இன்று அரசு பனை மரத்தை தேசிய மரமாக அறிவித்திருக்கிறது என்றால், அதனை பாதுகாக்க வேண்டும் என்பது தான். பனை மரத்தை மையமாக வைத்து இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் அண்ணனுக்கு பாராட்டுக்குள். வியாபாரி என்பவர் ஜெயிக்க வேண்டும், இந்த படத்தை தயாரித்த ராஜேந்திரன் அண்ணனும் ஜெயிக்க வேண்டும்” என்று விக்கிரமராஜா பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
‘நீட்டை ஒழிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை’ – ஸ்டாலின்
குவியும் முறைகேடு புகார் : நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் எடப்பாடி
Comments are closed.