ஈரோட்டில் இன்று (மார்ச் 5) அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. Erode Sengottaiyan meeting clash
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஈரோடு அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் பண்ணாரி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், பவானிசாகர், அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் எழுந்து, இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கட்சி நிர்வாகிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவரை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து பிரவீனை சூழ்ந்துகொண்டு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர். அங்கிருந்த சேர்களை பறக்கவிட்டு, ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள செங்கோட்டையன், “என்னிடம் கேள்வி எழுப்பியவர் கட்சியில் உறுப்பினரே கிடையாது. அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜா தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.
அதிமுகவுக்கு வாக்களிக்க கூடாது என்று அவர் பேசிய ஆடியோ என்னிடம் உள்ளது. அப்படிப்பட்ட துரோகத்தை செய்துவிட்டு, இந்த கூட்டம் முறையாக நடக்கூடாது என்று ஒரு ஆளை அனுப்பியிருக்கிறார். துரோகிகளை அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஈரோடு அதிமுக ஒற்றுமையுடன் சரியாக செயல்படுகிறது” என்று தெரிவித்தார். Erode Sengottaiyan meeting clash
