அனுமதி பெறாமல் சென்ற பிரச்சார ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதால், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் தேமுதிக வினர் வாக்குவாதம் செய்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர், துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் திரளான தொண்டர்கள் இன்று காலை முதல் பேரணியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு வைராபாளையம் பகுதியில் பிரச்சார ஊர்வலம் சென்ற போது அங்கு வந்த பறக்கும் படை தேர்தல் அதிகாரி, முன் அனுமதி பெறாமல் பிரச்சார ஊர்வலம் நடத்த கூடாது என தடுத்து நிறுத்தினார்.
இதனால் அவருடன் பார்த்தசாரதி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலத்தை நிறுத்த மறுத்த தேமுதிகவினர் விதியை மீறி இருந்தால் வழக்குப்பதிவு செய்து கொள்ளுங்கள் எனக்கூறி பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.
அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கலை.ரா
