இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கமல்ஹாசன் இன்று (ஜனவரி 25) தெரிவித்தார்.
அதோடு, இது அவசர நிலை தான், இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி குறித்துக் கூற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த கமலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், “இயற்கையிலேயே மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர். திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்த்தேன். அதன்படி ஆதரவு கொடுத்திருக்கிறார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
பிரியா