“வாக்குச்சாவடியிலேயே திமுக பணம் கொடுக்கிறது”: தொடர் புகார்களை அனுப்பும் அதிமுக!

Published On:

| By Kavi

ஈரோடு இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி திமுக வினர் நடந்து வருவதாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார். இது காலையிலிருந்து அதிமுக அனுப்பிய மூன்றாவது புகார் ஆகும்.

ஈரோடு இடைத்தேர்தல் இன்று (பிப்ரவரி 27) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் காலதாமதம் ஏற்படுவது, ஆதாரை ஏற்க மறுப்பு, கட்சி நிர்வாகிகள் அந்தக்கட்சியின் அடையாளத்துடன் வாக்குச்சாவடிக்கு வருகைத் தருதல் என சில சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஈரோடு பெரியார் நகர் பகுதியில் அதிமுக, திமுகவி னர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுகவினரும், தென்னரசுக்கு ஆதரவாக அதிமுகவினரும் ஒன்றாக வாக்கு சேகரித்த நிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் சின்னத்தைக் காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு கூடியிருந்தவர்களை துணை ராணுவத்தினர் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

இந்தசூழலில் திமுக வினர் விதிமீறலில் ஈடுபடுவதாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

அக்கட்சி வழக்கறிஞர் இன்பதுரை அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “திமுக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்துகொண்டிருக்கிறது.

அசோகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 138, 139 வாக்குச்சாவடிகளில் திமுக வினர் கட்சிக் கொடி வண்ணம் கொண்ட சால்வைகளை அணிந்துகொண்டும், கை சின்னம் கொண்ட பேட்ஜை அணிந்துகொண்டும் வருகை தருகின்றனர்.

அவர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கின்றனர். காவல்துறையினரும் அதை தடுப்பதில்லை. இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு மின்னஞ்சலில் 180ஆவது வாக்குச்சாவடியில் ஆதார் அட்டை ஆவணமாக ஏற்க மறுக்கப்பட்டது தொடர்பாகவும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும் மை தரமற்றதாக இருக்கிறது. இதனால் போலி வாக்குகள் அதிகரிக்கலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால் தேர்தல் அலுவலர் சிவக்குமார், வாக்கு மை எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

ஆதார் ஏற்க மறுப்பு : தேர்தல் அலுவலர் பேட்டி!

ஈரோடு கிழக்கு தேர்தல் : 11 மணி அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share