ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்!

Published On:

| By Jegadeesh

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 22 ) ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சீமான் பிரசாரம் செய்தார். மேடையில் சீமான் பேச தயாராக இருந்த நேரத்தில் வீரப்பன்சத்திரம் பகுதியில் திடீரென்று நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. பின்னர், இருகட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். மேலும், கற்கள் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்ட கம்புகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் வீச தொடங்கினர்.

இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. அங்கு இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அலறி அடித்து ஓடினர்.

இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் உள்பட சிலருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன் காரணமாக சீமான் தேர்தல் பரப்புரையை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். மேலும் அந்த பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதால் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சீமான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

நரபலிக்கு பயந்து தமிழ்நாடு வந்த வட இந்திய பெண்: பாதுகாப்புகோரி நீதிமன்றத்தில் மனு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share