ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்றே மக்கள் நினைக்கின்றனர் என அக்கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று (ஜனவரி 22) கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாஜக என்பது தேசிய கட்சி. தேர்தல் குழு இருக்கிறது. கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களிடம் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு தான் ஈரோடு கிழக்கு தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க முடியும்.
திமுக-வை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக எத்தகைய வியூகத்தையும் நாங்கள் வகுப்போம். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்றே மக்கள் நினைக்கின்றனர்.
அதிமுகவிற்கு மத்தியஸ்தம் செய்யும் இடத்தில் பாஜக இல்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைவார்களா என்பது அவர்களுக்கு தான் தெரியும்.
பாஜகவின் நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக கட்சியின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டார்.
அப்போது கே.பி.ராமலிங்கம், “ஈரோடு கிழக்கு தொகுதியின் 50 சதவிகித பகுதிகளில் பாஜக-விற்கு கட்டமைப்பே இல்லை. எனவே நாம் அங்கே போட்டியிட்டால், கட்சிக்கு அவப்பெயர் தான் ஏற்படும்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேர்தலில் போட்டியிட மக்கள் விருப்பம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். அவரது இந்த மாறுபட்ட கருத்துக்கள் பாஜக தனித்து களம் காண்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
செல்வம்