அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாளை (செப்டம்பர் 8) முதல் முறையாக அதிமுக அலுவலகத்திற்கு வர இருப்பதாக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.
இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது அதிமுக தலைமை அலுவலகம் சென்று தனது பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றியதால் இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே வன்முறை ஏற்பட்டது.
இதனால் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தொண்டர்கள் ஒரு மாத காலத்திற்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்திற்குள் தொண்டர்கள் அனுமதி தொடர்பான கட்டுப்பாடு கடந்த வாரத்தோடு முடிவடைந்த நிலையில்,
அதிமுக பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்த நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி , 8.9.2022 காலை 10 மணியளவில்,
தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற,
சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
