பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்கள் சந்திப்பில், “அதிமுகவில் மீண்டும் ஒன்று சேர நான் ரெடி… டிடிவி தினகரனும் அவரின் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் “ஓ.பி.எஸ். அதிமுகவில் இணைய ரெடி என்று சொன்னது குறித்து” செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,“நான் பலமுறை சொல்லிவிட்டேன். உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக அடிக்கடி இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதை ஓ.பி.எஸ். இன்றைக்கா கேட்டார்? மூன்று நான்கு ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்.
ஏற்கனவே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு இது. ஓ.பி.எஸ். அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்; நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எந்த விதமான வாய்ப்பும் இல்லை.
‘ஓ.பி.எஸ். புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை’ என்று தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அதை அவரிடம் சென்று கேளுங்கள். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு பொதுச்செயலாளரால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. சென்னையில் 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றாகக் கூடி, இந்த இயக்கத்திற்கு துரோகம் இழைத்த காரணத்தால் எடுக்கப்பட்ட ஓபிஎஸ் மீது நடவடிக்கை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு, ஓபிஎஸ் வந்தால் சேர்ப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
