கே.ஏ. செங்கோட்டையன் மனம் திறப்பது குறித்து இன்று மாலை கூட்டத்தில் பேசுகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது கொங்கு பகுதி அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ செங்கோட்டையன் எம்.எல்.ஏ அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். மேலும் சட்டமன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து தனித்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் வரும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் தொடங்கிய போது, அதில் கட்சியின் சீனியரான செங்கோட்டையன் பங்கேற்காதது பேசுபொருளானது.
இந்த நிலையில் அவர் செப்டம்பர் 5ம் தேதி மனம் திறப்பதாக நேற்று இரவு செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் இன்று காலையில் கோபி செட்டி பாளையத்தில் உள்ள ஈரோடு புறநகர் மேற்கு கட்சி அலுவலகத்தில் முதலில் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் 1மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் தனது தீவிர ஆதரவாளர்களுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
ஆதரவாளர்களுடனான ஆலோசனையை முடித்து வெளியில் வந்த செங்கோட்டையனிடம் ஓபிஎஸ், தினகரன், சசிகலா இணைப்புக்கு குரல் கொடுப்பாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். ஆனால் செங்கோட்டையன் உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் பதில் அளிப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மதுரையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் மனம் திறப்பதாக கூறியிருப்பது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு இன்று மாலை கூட்டத்தில் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அதிமுகவில் அமைதியாக இருந்து வந்த செங்கோட்டையன் தற்போது போர்க்கொடி தூக்கி இருப்பது கட்சித்தொண்டர்களிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
