சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள், கட்சி பேதமின்றி ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 18) கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் 15-வது துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ”இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர் வருவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகவே சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
எடப்பாடியின் இந்த கோரிக்கை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்தியா கூட்டணி சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளருக்கு தமிழக எம்.பிக்கள் வாக்களிப்பார்களா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
