அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும் என சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். eps reply on amit shah on nda alliance in 2026
தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று (மார்ச் 25) இரவு அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இரவு 8.15 முதல் 10.30 மணி வரை என இரண்டு மணிக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பால், மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி பேச்சுக்கு அச்சாரம் அமைத்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு புறப்படும் முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அமித் ஷா உடனான சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு… eps reply on amit shah on nda alliance in 2026
அப்போது அவர், “ஏற்கெனவே நான் அமித் ஷாவை ஏன் சந்தித்தேன் என்பது குறித்து டெல்லியில் பேட்டியளித்துவிட்டேன். 2026ல் கூட்டணி தான் என்று பலமுறை தெரிவித்துவிட்டேன். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் இதுவரை ஒரே நிலைப்பாட்டில் இருந்தது உண்டா? தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் கூட்டணி குறித்து அறிவிக்க முடியும். அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என அமித் ஷா கூறிய கருத்துக்கு நான் எப்படி பதில் அளிக்க முடியும்? அதிமுகவை பொறுத்தவரை 2026ல் திமுகவை வீழ்த்த வேண்டும்” என்பதே எங்களின் ஒரே இலக்கு. அதற்காக உழைப்போம்” என எடப்பாடி தெரிவித்தார்.