“அதிமுக ஆட்சி அமைந்தால் மீண்டும் ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ செயல்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். EPS AIADMK
கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொழில் துறையினருடன் கலந்துரையாடினார். இதில், தமிழக அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு, தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன், டேக்ட் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் கோவை விமான நிலைய
விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்தவர்கள் என பல தரப்பினரும் தங்கள் பிரச்சனைகள் குறித்து பேசினார்.
இதைதொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தொழில் முனைவோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மின் கட்டண உயர்வால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எங்களால் இயன்ற நடவடிக்கைகளை எடுக்க முயற்சிப்போம். ராணுவ உதிரி பாகங்கள் அமைக்கும் நிறுவனங்கள் அமைய இருந்த நிலையில், மத்திய அரசுடன் இணக்கமான சூழல் இல்லாததால் அது அமையவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒன்றிய அரசுடன் இணைந்து இராணுவ தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலைகள் கொண்டு வரப்படும் என்றார்.
மேலும் அனைவருக்கும் பொதுவான நபராக விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பது குறித்து கருத்து சொல்ல வேண்டி உள்ளது. தொழில் சிறக்க விமான நிலையம் தேவை என்றார். “நான் முதல்வராக இருந்த போது நிலத்தை எடுக்க உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கைகள் எடுத்தோம், மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் ஒன்றிய அரசுடன் இணைந்து கிடப்பில் இருக்கும் விமான நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார்.
